கிரேக்கக் கலை மரபு
பெரிக்ளிஸ் தன் நாட்டு மக்களை அழகு விரும்பிகள் (Loxers of beauty) என்றார். மட்பாண்டக்கலையை அறிந்து கொண்டு பானை செய்து அதில் உணவை சமைத்து, உண்டு கொழுத்து, உறங்கிக் களிக்காமால் அந்தப் பானைகளின் மேல் அழகழகான ஓவியங்களைத் தீட்டி ஓவியக் கலையை வளர்த்தவர்களே பண்டைய கிரேக்கர்கள். பளபளக்கும் மண்குடுவைகளைச் செய்து அவற்றில் மதுவை ஊற்றிக் குடித்து போதையில் மூழ்கி விடாமல் அவற்றின் மேல் வண்ண வண்ண ஓவியங்களைத் தீட்டி வண்ண ஓவியக் கலையை வளர்த்தவர்களே பண்டைய கிரேக்கர்கள். தெய்வங்களையும், ஆட்சியாளர்களையும் சிற்பங்களாக்கி வழிபடும் துதிபாடிகளாக மட்டும் இருந்துவிடாமல் எழில் கொஞ்சும் கலைநயச் சிற்பங்களைச் செதுக்கி கலையின் அடிப்படையான அழகுணர்ச்சியை அகிலத்துக்கும் அறிவித்தவர்களே அன்றைய கிரேக்கர்கள். ஆம் கிரேக்கக் கலையின் சிறப்புத் தன்மையே அதன் மனிதச் சார்புதான் (Humanistic). இல்லாததை இருப்பதாகக் காட்டுவதை வெறுத்த கிரேக்கர்கள், இருப்பதை மறைப்பதையும் வெறுத்தனர். ஆகவேதான் உள்ளதை உள்ளபடியே கலையில் வடித்தனர். முன்னால் அமர்ந்துள்ளவர் பின்னால் அமர்ந்துள்ளவருக்கு நாடக மேடையை மறைக்காமல் இருக்கும் பொருட்டே மலைச் சரிவுகளைச் சீர்படுத்தி நாடகத்தைக் காணுவோர் அமரும் வனப்பு மிகு இருக்கைகளாக்கும் திறந்த வெளி நாடகத் தொழில் நுட்பத்தை அறிந்தவர்களே கட்டடக்லை வல்லுனர்களான அன்றைய கிரேக்கர்கள்