இயற்கையை எழுதுதல் என்பது மனித உணர்வில் கலந்த அழகியல் செயல்பாட்டின் ஒரு நெறிமுறை என்பதையும் கடந்து மனிதப் பண்பாட்டினை வடிவமைக்கிற ஒரு செயல்முறைத் தந்திரமாகவும் எனக்குப் படுகிறது. சங்க இலக்கிய அகப்பாடல்களில் இயற்கை இவ்வாறுதான் கையாளப் பட்டுள்ளது எனச் சொல்லலாம். கூடவே இயற்கைக்கும் மனிதப் பண்பாட்டிற்கும் இடையே ஊடாடும் ஒருமைப் பண்பைச் சிதைக்காமல் காப்பாற்ற முயலும் முயற்சியாக இயற்கைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மனிதர்களுக்கான மேன்மையான ஒரு வாழ்முறையைக் கண்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக அந்த எழுத்துக்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் இயற்கையை எழுதுதல் என்பது வெறுமனே இயற்கையைப் புனைவு மொழிகளால் மனிதக் கற்பனை வளங்களால் வர்ணிப்பதோ அல்லது வழிபடுவதோ அல்ல மாறாக அதுவொரு தத்துவப் பார்வை வாழ்தலின் வகைமுறை குறித்த ஒரு தேடல் என்றாகி விடுகிறது. கி.ரா.வின் இயற்கையை எழுதுதல் என்பதும் இப்படியொரு சங்க இலக்கிய மரபின் தொடர்ச்சியாகத்தான் அமைந்துள்ளதாக எனக்குப் படுகிறது உரைநடை வடிவம் என்பதால் இந்தப் புனைகதை எழுத்தாளருக்குச் செய்யுள்' செய்யும் எழுத்தாளர்களைவிடக் கூடுதலான விரிந்து பரந்த களமும் வாய்த்துள்ளன எனக் கருதலாம். இயற்கை என்பது ‘நிலமும் -பொழுதும்’ என்ற கருத்தியத்தின் அடிப்படையில் இரண்டு சொற்களின் உறவுகளைச் சென்று பார்க்கிறார். அவற்றிடம் எங்கள் படைப்பாளி எவ்வாறெல்லாம் தனதெழுத்தில் உங்கள் பெருமைகளைக் கொண்டாடுகிறான் பாருங்கள் என்கிறார். கி.ராவின் மண்ணு தின்னியும், புல் பூண்டும், மண் தினுசுகளும், கலப்பைக் கொழுவும், முள்ளெலிகளும், காட்டாமணக்குவிதைகளும் பஞ்சாங்கத்தின் கைப்பகுவத்தில் மீசை முறுக்குகின்றன. நிலம், பொழுது, கருப்பொருட்கள், விலங்குலகம், பறவைஉலகம், தாவரங்களென கி.ராவின் எழுத்துலகம் காட்சிப்படுத்தப்படுகிறது.