"தமிழில் வெளிவந்துள்ள பெரும்பாலான இலக்கிய வரலாற்று நூல்களையும் இலக்கிய ஆய்வு நூல்களையும் படிக்கும்பொழுது, குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாய்த் தோன்றும் பெருங்குறைபாடு ஒன்று உண்டு. அது யாதெனில், பொருளாதார சமூக இயக்கங்களுக்கும் இலக்கிய ஆக்கத்திற்குமுள்ள நுண்ணிய உறவு அந்நூல்களில் எடுத்து ஆராயப்படாமையாகும்" என்று கலாநிதி க.கைலாசபதி 1982-ல் குறிப்பிட்டது இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. ஒரு படைப்பை ஆய்வு செய்கின்ற போது, அதிலிருக்கின்ற அழகுணர்ச்சி, அங்கதச் சுவை, உவமைகள், சொல்லாட்சி, மொழிநடை, கற்பனைவளம் ஆகியவற்றைச் சிலாகித்துப் பேசுவோரும், எழுதுவோரும் உண்டு. ஆனால், அந்தப் படைப்பு தோன்றிய காலத்தில் இருந்த சூழ்நிலைகள், போராட்டங்கள், பிரச்சனைகள் ஆகியவற்றை அது எதிரொலிக்கிறதா? அல்லது அத்தகைய காலச்சூழல்கள் அந்தப் படைப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? என்ற தேடல்களை ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டும்