சங்க காலத் தொழில்நுட்பம்
சங்க இலக்கியம் ஒரு நாட்டின் சுயசரிதை என்று எமர்சன் என்ற திறனாய்வாளர் இயம்பியுள்ளார். சங்ககாலத் தமிழகத்தின் சுயசரிதையாகச் இலக்கியம் திகழ்கின்றது. அக்காலத்து மக்களின் வாழ்வியல், பண்பாட்டியல், அயல்நாட்டுத் தொடர்பு, வாணிகம், கலைகள், நம்பிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கூறுகளையும் அறிந்துகொள்வதற்குச் சங்கஇலக்கியப் பாக்கள் ஆவணமாக விளங்குகின்றன. சங்க இலக்கியம் பற்றிக் கடந்த நூற்றாண்டில் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இலக்கிய நோக்கிலும் பண்பாட்டியல் நோக்கிலும் அறவியல் நோக்கிலும் வரலாற்றியல் நோக்கிலும் யாப்பியல் நோக்கிலும் அவை அமைந்துள்ளன. உலகில் நாகரிகம் படைத்த எகிப்தியர், பாபிலோனியர், கிரேக்கர், சீனர் உள்ளிட்ட இனங்களுக்கு நிகராகத் தமிழ்ப் பெருமக்கள் துறைதோறும் மேம்பட்டு விளங்கிய உண்மையினை உணர்ந்து கொள்ளும் வகையில் மிகச்சில ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள், "சங்க காலத் தொழில்நுட்பம்" என்ற பொருண்மையில் பேராசிரியர் த.சாமிநாதன் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுநூல் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியப்பாக்களை நுண்ணிதின் ஆராய்ந்து தம் ஆய்வுக்கு வேண்டிய தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தியும் முறைப்படுத்தியும் பதினெட்டு இயல்களில் இச்சிறந்த நூலினை இவர் உருவாக்கியுள்ளார். வேதியியல் பேராசிரியராகிய இந்நூலாசிரியர் அறிவியல் நோக்கில் இந்த இயல்களை அமைத்திருத்தல் நோக்கத்தக்கது. மக்களுக்கு உயிர்த் தொழிலாக விளங்கும் பயிர்த்தொழில் பற்றிய செய்திகள் முதல் இயலில் இடம்பெற்றுள்ளன. சங்க காலத்து மக்கள் பயிரிட்ட கூலங்கள் பற்றிய விளக்கம் ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ளது. நெல், வரகு, திணை, எள், அவரை, பாசிப்பயிறு, உழுந்து, பருத்தி, தென்னை, மஞ்சள், இஞ்சி, கிழங்கு, மிளகு, கரும்பு, என்பன பயிரிடப்பட்ட பாங்கினை நூலசிரியர் விரிவாக எழுதியுள்ளார்