அதிர்வுகள்
இன்குலாப் என்ற சொல்லுக்குப் புரட்சி என்று பொருள். கவிஞர் இன்குலாப் புரட்சிக் கவிஞராக வாழ்ந்தார். வர்க்க, சாதிய, பாலின, மத, இன, பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர் இன்குலாப். கடந்த 01.12. 2016 அன்று தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் நாடகங்களாகவும் உரையாகவும் பாடல்களாகவும் அவர் முன்வைத்த ஒவ்வொரு சொல்லும் ஆளும் வர்க்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. புனிதமெனக் கட்டமைக்கப்பட்ட தமிழின் பிம்பத்தை தலைகீழாகக் கவிழ்த்தது. பழந்தமிழ்ப் பனுவல்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, அவர் இயற்றிய ஔவை, குறிஞ்சிப்பாட்டு, மணிமேகலை போன்ற நாடகங்கள் உலகு தழுவிய மேன்மை கொண்டவை. விருதுகளை உதாசீனப்படுத்தியவர். விடுதலையே இலக்கு என்று முழங்கியவர். யாரோடும் எதனோடும் சமரசம் இல்லாமல் தன் இறுதி மூச்சு வரை தொடர்ந்து போராடியவர்.